கொரோனா வைரஸ் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் தற்போது கலைக்கப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்றம் அடுத்தவாரமளவில் மீள் அழைக்கப்படும் என தகவல் வந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை மீள் அழைப்பதற்காக எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கைகளை கோட்டாபய – மஹிந்த தலைமையிலான அரசாங்கம் நிராகரித்து வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இந்த தகவலை வெளியிட்டார்.
‘கொரோனா வைரஸினால் கண்டி மாவட்டத்திலுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பக்கச்சார்பாக வழங்கப்படுவதாக மக்களின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாக மக்களின் பிரதிநிதிகளே எம்மிடம் முறையிடுகின்றனர். நிவாரணங்களும் மக்களுக்கு போய்ச்சேரவில்லை. இந்நிலையில் அடுத்த வாரமளவில் நாடாளுமன்றம் மீள் அழைக்கப்படும் என அறியக்கிடைத்துள்ளது. அந்த முடிவினை நாங்கள் வரவேற்கின்றோம்.
எமது பிரச்சினைகள், எமது கட்சி ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகள், பக்கச்சார்பான விடயங்களை அரசாங்கத்திடம் எடுத்துக்கூற முடியும். பக்கச்சார்பாக அரசியல் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை பார்க்காமல் நாடு என்பதை முதன்மைப்படுத்தி முடிவுகாணும்படி வலியுறுத்துகின்றேன்” என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை